நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு - எட்டப்படவுள்ள உடன்பாடு
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும், நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் இலக்கு
“எனது முயற்சி அரசியலன்றி நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து மக்கள் மீதான சுமையை குறைப்பதே. நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம் எனக்கு இருக்கிறது.
அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆம் ஆண்டு ஆகும் போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும்.
2048 இலங்கைக்கு அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதோடு, தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் தான் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறோம்.
நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது” - என்றார்.
