நிறைவேற்று அதிகார முறை ஆபத்தானது - நஸீர் அஹமட்
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது. இந்தப் பதவிக்கு வரும் ஆட்களைப் பொறுத்தே, இதன் ஆழ அகலங்கள் அறியப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,
“நிறைவேற்று அதிகாரம் மக்களுக்கான உச்சபட்ச பாதுகாப்பை அளிக்கிறது. கடந்த காலங்களில் அனுபவிக்க நேர்ந்தவைகள் சிலவற்றால், இப்பதவியை ஒழிக்க வேண்டுமென்ற கோஷங்கள் எழுந்துள்ளன.
ஆனால், இதை ஒழிக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தெளிவான நிலைப்பாடும் இதுவே.
மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் போது தான் எல்லோருக்குமான எங்கள் அரச தலைவர் என்ற உரிமையிருக்கும்.
இலங்கையில் உள்ள அத்தனை பிரஜைகளும் வாக்களிப்பதால் அரச தலைரவருக்கும் ஒரு கடப்பாடு ஏற்படுகின்றது. மாறாக நாடாளுமன்றம் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதால் அவர், ஒரு மாவட்டத்துக்கு அல்லது பிரதேசத்துக்கு உரியவராகவே அர்த்தப்படும்.
அதுமட்டுமல்ல, தேர்தலூடான தெரிவு வரும்போது தான், சமூங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இவருக்கு ஏற்படும்.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் அவர் கடமைப்பட்டவராகிறார். ஏதாவதொரு அவசர தேவைகளை அடைந்து கொள்ள அரச தலைவருடனுள்ள உறவுகள் அல்லது புரிந்துணர்வுகள் வழிவகுக்கும்.
இவ்வாறு, பல விடயங்கள் கடந்த காலங்களில் பெறப்பட்டுள்ளன. தனியொருவரின், மனநிலைகளுக்காக, இந்த அதிகாரத்தையே முற்றாக ஒழிக்குமாறு கோருவது அர்த்தமுள்ள சிந்தனையாகாது” என்றார்.
