சிறிலங்கா காவல்துறை தொடர்பில் அம்பலமான தகவல்
முறையான திட்டமிடல் எதுவும் இல்லை
காவல் நிலையங்களுக்கு பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் திட்டத்தில் காவல்துறை திணைக்களத்திடம் முறையான திட்டமிடல் அல்லது நடைமுறை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
காவல்துறை மா அதிபரினால் பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றினூடாகவே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசியல் சிபாரிசுகளில் நியமனம்
நாடளாவிய ரீதியிலுள்ள 182 காவல் நிலையங்களுக்கு அரசியல் சிபாரிசுகளின் பேரில் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பதிலளிக்கும் வகையில் காவல்துறை மா அதிபரினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் சமர்ப்பித்த அறிக்கை
காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதற்கான பிரத்தியேக நடைமுறைகள் திணைக்களத்தில் இல்லாத நிலையில், பல்வேறு காரணங்களினாலும் அழுத்தங்களினாலும் சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமை காவல்துறை மா அதிபர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தெரியவருவதாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், குறிப்பிட்ட மற்றும் முறையான நடைமுறை திட்டமொன்றை தயாரித்து அனுப்புமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காவல்துறை மா அதிபரினால் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கூடிய தமது ஆணைக்குழு, காவல்துறை மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை பரிசீலித்ததாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய திருத்தங்களை இணைத்ததன் பின்னர், காவல் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்கான குறிப்பிட்ட மற்றும் முறையான நடைமுறைத்திட்டம் காவல் துறை திணைக்களத்திற்கு அனுப்பப்படுமென ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனிடையே, 3 சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு இணங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
