அறிவை பயன்படுத்த தவறினால் சீனாவின் ஆதரவை இழக்க நேரிடும்: மைத்திரி
அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் அறிவை பயன்படுத்தி வேலை செய்யவில்லை என்றால், இலங்கை சீனாவின் ஆதரவை இழந்து விடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் ஊடக மத்திய நிலையத்தை இன்று திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சீன கப்பல் சம்பந்தமான பிரச்சினையை பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்
இலங்கையின் அனுமதியுடன் சீனாவில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரை வரவிருந்த யுவான் வாங் -5 கப்பல் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையை அரசாங்கம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படாத வகையிலும் நஷ்டம் ஏற்படாத வகையிலும் தீர்த்துக்கொள்ளும் என நம்புகிறேன்.
எனது அரசாங்கத்தின் ஆட்சி வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக ஜப்பான் இலங்கையிடம் இருந்து விலகி சென்றது. இது நாட்டின் வெளிவிவகார கொள்கையில் இருக்கும் தவறு.இலங்கைக்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முக்கியம்.
என்னை அதிபராக பதவியில் அமர்த்தியதும் இல்லாதொழித்ததும் ஊடகங்களே
தற்போதைய புதிய தொழிற்நுட்பத்துடன் ஊடகங்கள் மிகவும் பலமிக்கவையாக மாறியுள்ளன.கையில் ஐந்து சதமின்றி ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதும் அதிபர் பதவிக்கு கொண்டு வந்த சமூக ஊடகங்கள் இறுதி காலத்தில் என்னை இல்லாதொழித்தன.
இளைஞர்கள் தலைமை தாங்கிய போராட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்களை திரட்டி, நாட்டின் ஆட்சியாளர் நாட்டில் இருந்து வெளியேற்றும் அளவுக்கான பலம் கையடக்க தொலைபேசிகள் மூலம் கட்டியெழுப்பபட்டது.
அரசாங்கம் எந்தளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அரசாங்கத்தை மோசமான அரசாங்கமாக சித்திரித்து காட்டவும் மோசமான அரசாங்கமாக இருந்தாலும் சிறந்த அரசாங்கமாக காட்டவும் ஊடகங்களுக்கு முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.