விவசாய அமைச்சரின் கருத்துக்கு எதிராக வெடித்த சர்ச்சை
அரிசி விற்பனை குறித்து விவசாய அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு விவசாய அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாயின், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த (K. D. Lalkantha) நேற்று (19) தெரிவித்திருந்தார்.
அத்துடன் இதுவே, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் நாமே பயரிட்டு, நாமே உண்போம் என்ற கொள்கை தங்களிடம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதி
இத்தகைய கொள்கையை நாம் கொண்டிருப்போமாயின், நாம் அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்பதை அறிந்துகொள்ளும் மோசடி விற்பனையாளர்கள் தங்களுக்கு ஏற்றவகையில் விலையை அதிகரிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அமைச்சரின் இவ்வாறான கருத்துக்கு விவசாய அமைப்புகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, ”முன்னதாக அரிசி இறக்குமதிக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த அரசாங்கம், தற்போது அதிலிருந்து விடுப்பட்டு பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
விலையை கட்டுப்படுத்துவதற்கு அரிசி உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுமாயின், உள்நாட்டு உற்பத்திகளை குப்பைகளில் தூக்கி எறிய வேண்டி ஏற்படும்.
நெல் கொள்வனவு
சந்தையில் அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அரிசியை இறக்குமதி செய்வது ஒருபோதும் தீர்வாக அமையாது. அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதால் மாத்திரம் நிலைமை கட்டுப்படுத்த முடியும்.
தற்போது, ”அரிசி இறக்குமதி செய்வதாக அரசாங்கம் அச்சுறுத்துகிறது அதனால் நாம் நெல்லை குறைந்த விலையில் கொள்வனவு செய்கிறோம்” என பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாயிகளிடம் கூறுகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான தீர்மானங்களால் அரசாங்கம் மேலும் பலவீனமடைந்து, அதன் ஆயுட்காலமும் குறைவடைந்து வருகின்றது” என விவசாய அமைப்புகள் தெரிவிகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
