தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர்
மன்னாரில் (Mannar) இடம்பெற்ற தந்தை செல்வாவின் சிலை திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த சிலையை புனர் நிர்மானம் செய்யும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
திறக்க நடவடிக்கை
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் புனர் நிர்மாண பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி தந்தை செல்வாவின் சிலை மீண்டும் திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கட்சி உறுப்பினர்
உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் நகர கிளை தலைவராக உள்ள நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் மாலை அணிவிக்க வேண்டிய தருணத்தில் , நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மலர் மாலை அணிவித்து உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நிகழ்வின் இறுதியில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் தொனியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருவருடைய கடிதங்கள்
அத்தோடு, இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தநிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் சாள்ஸ் மற்றும் பொருளாளர் பரஞ்சோதி ஆகிய இருவருடைய கடிதங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குறித்த கடிதத்தை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சி.வி.கே.சிவஞானம் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
