மைத்ரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..! சந்தேகநபர்கள் கைது
முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின், பிரசார மேடை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லேரியா, வல்பொல பிரதேசத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரசார கூட்டம்
உந்துருளியில் பயணித்த வேளையில் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டது்டன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
34 மற்றும் 29 வயதுடைய இவர்கள் கடுவெல மற்றும் ஹிம்புட்டானை பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி உமகிலிய விளையாட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தின்போது, மேடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன், மேற்படி சந்தேகநபர்களுள் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.