வெடித்தது கலவரம்! சிறையிடப்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து நாட்டின் இரு மாகாணங்களில் வன்முறைக் கலவரம் வெடித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் ஒரே இரவில் கடைகள் சூறையாடப்பட்டன, நெஞ்சாலைகளின் ஒரு பகுதி மூடப்பட்டது.
குறைந்தது 62 வன்முறையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக ஜுமா கடந்த வாரம் 15 மாத சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கான சிறைச்சாலையில் அடைக்கப்படடார்.
79 வயதான முன்னாள் ஜனாதிபதி 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அரசு ஆதரவு விசாரணைக்கு முன் சாட்சியமளிக்க நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் ஜுமாவின் ஆதரவாளர்களின் கலவரம் கடந்த வாரம் அவரது சொந்த பிராந்தியமான குவாசுலு-நடால் மாகாணத்தில் தொடங்கி வார இறுதியில் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கை உள்ளடக்கிய கெளடெங் மாகாணத்திற்கு பரவியது.
பொலிஸ் மேஜர் ஜெனரல் மாதபெலோ பீட்டர்ஸின் அறிக்கையின்படி, ஜோகன்னஸ்பர்க்கின் அலெக்ஸாண்ட்ரா மற்றும் பிராம்லி சுற்றுப்புறங்களில் பல நூறு பேர் கடைகளை சூறையாடி எரித்தனர்.
எரிக்கப்பட்ட ஒரு கடையில் இருந்து 40 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கொள்ளையர்களை கைதுசெய்ய முயன்றபோது குறைந்தது மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
