பிரான்சில் பரபரப்பாகும் தேர்தல் களம் - இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகளால் சவால் நிலை
பிரான்சில் நாளை இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் களத்தின் முதற்சுற்று வாக்களிப்புக்கான பரப்புரைக்களம் முடிவடைந்துள்ளது. நாளை 10 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதில் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட புலம்பெயர் தமிழ் வாக்காளர்கள் உட்பட்ட மில்லியன் கணக்காக வாக்காளர்கள் வாக்களிக்க காத்துள்ளனர்.
வாக்களிப்புக்கு முன்னர் நேற்று வெளியான இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகள், இரண்டாவது தடவை ஆட்சிக்காக காத்திருக்கும் அரச தலைவர் இமானுவேல் மக்ரனுக்கு மிகப்பெரிய சவால் நிலை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இளம் வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டுமென நேற்றைய தனது இறுதி பரப்புரையில் மக்ரன் அழைப்பு விடுத்துள்ளார்.
முதற் சுற்று வாக்களிப்பில் முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட அதிதீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லு பென் நெருக்கமாக வந்திருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டியுள்ளன.
மக்ரன் 26 வீத வாக்குகளையும், மரின் லு பென் 25 வீத வாக்குகளையும் எடுக்கக்கூடும் என சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.