உலகளாவிய ரீதியான பாரிய முறைகேடு - சிக்கவுள்ள பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள்!
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் விசாரணைக்குள்ளாகவுள்ளதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலி இணைய பக்கம் ஊடாக வங்கி அதிகாரிகள் என அடையாளப்படுத்தி முறைகேடில் ஈடுபட்ட குழு ஒன்று காவல்துறை நடவடிக்கையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்தே காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இணைய முறைகேடு
குறித்த நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைதாகியுள்ளனர். iSpoof என்ற இணைய பக்கமூடாகவே இந்த முறைகேடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போலி இணையப் பக்கம் முடக்கப்படும் முன்னர் சுமார் 3.2 மில்லியன் பவுண்டுகள் வரையில் இந்த குழுவினர் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த iSpoof இணைய பக்கத்தால் பாதிக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 70,000 பிரித்தானியர்களை அடுத்த இரு தினங்களில் காவல்துறையினர் விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மொத்தம் 20,000 பேர்களிடம் 48 மில்லியன் பவுண்டுகள் வரையில் வங்கி அதிகாரிகள் என்ற போர்வையில் இந்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் கைது
உண்மையில், வெளியான தகவலைவிட பலமடங்கு தொகை அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 10,000 பவுண்டுகள் வரையில் பறிகொடுத்துள்ளனர். ஆனால் ஒரு பிரித்தானியர் மட்டும் 3 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 120 பேர் பிரித்தானியாவில் கைதாகியுள்ளனர். பெரும்பாலானோர் லண்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.
மேலும், ஹாலந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இருந்தும் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மோசடி தொலைபேசி அழைப்புகள்
iSpoof என்ற இணையமூடாக 10 மில்லியன் மோசடி தொலைபேசி அழைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 40% அமெரிக்க மக்களை குறிவைத்துள்ளதும் 35% பிரித்தானிய மக்களை இலக்கு வைத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, iSpoof தளத்தை நிர்வகித்து வந்த 35 வயதான Teejay Fletcher என்பவரை இந்த மாத ஆரம்பத்தில் லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.