நாங்கள் புலிகளின் துப்பாக்கியால் இறந்திருக்கலாம் - பதவியைத் துறவுங்கள் கோட்டாபய; சிங்கள நடிகர் பகிரங்கம்!(காணொலி)
தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களைப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டைக் கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுவதாக சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க (Gayan Wickramathillaka) தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் மிகவும் யோசித்துப் பேசுகிறேன், இப்படிப் பேச வேண்டும் என்று நினைக்கவில்லை, நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, அரசியல் என்பது முற்றிலும் வெறுத்துப் போயுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வர கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்களிப்பைச் செய்தேன். சரள மொழியில் கூறுவதென்றால் கடைக்குப் போனேன், சொந்தப் பணத்தை செலவிட்டேன்.
நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதனைச் செய்தேன். எந்தப் பிரதிபலன்களையும் எதிர்பார்த்து, கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராக பதவிக்குக் கொண்டுவர கடைக்குப் போகவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையாது ஈஸ்டர் தாக்குதலை விட மோசமானது, ஈஸ்டர் தாக்குதல் நடந்த நேரத்தில் நாங்கள் பெரிதும் குழப்பமடைந்தோம், இந்த நாட்டுக்கு இப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணம் எமக்குள் இருந்தது. எனினும் இவை அனைத்தும் திட்டங்களுக்கு அமைய நடப்பவை என எனக்கு தோன்றுகிறது. அதற்குக் காரணம் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, இரட்டைக் குடியுரிமை கொண்டவரை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தது. அவரை நிதியமைச்சராகவும் நியமித்துள்ளது, அந்த நிதியமைச்சர் தற்போது முழு நாட்டையும் நிர்வாகம் செய்து வருகிறார். நிர்வாகம் செய்வது எமக்கு பிரச்சினையல்ல, நாட்டு மக்கள் தற்போது எரிவாயு வரிசைகளிலும் டீசல் வரிசைகளிலும் நிற்கின்றனர்.
மண்ணெண்ணெய் இல்லை, சாப்பிடுவதற்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வழியில்லை, டொலர் கையிருப்பு பூஜ்ஜியமாகியுள்ளது. நாடு என்ற வகையில் உலகத்தினர் முன்னால் எம்மை பிச்சைக்காரர்களாக ஆக்கியுள்ளனர். இது அறிந்தே செய்யும் வேலை என தோன்றுகிறது. அரச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக செய்திகளைப் பார்த்தோம், நாட்டுக்கு உரையாற்றும் போது எவராவது எழுதிக்கொடுத்ததை கொண்டு வந்து கூற வேண்டாம் என அரச தலைவரிடம் கோருகின்றேன்.
உங்களுக்கு முடிந்தால், இராஜினாமா செய்யுங்கள், இன்னும் இரண்டு ஆண்டுகள் உங்களுக்கு அரச தலைவர் ஆசனத்தில் இருக்க முடியும், நிதியமைச்சருக்கும் இருக்க முடியும். அதன் பின்னர் ராஜபக்சவினர் எவருக்கும் மீண்டும் நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடிய வாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது.
மக்கள் விடுதலைப்புலிகளின் வெடி குண்டில் சிக்கி அல்லது ஈஸ்டர் தாக்குதலில் சிக்கி, அணுகுண்டு வெடித்து முழு நாட்டில் வாழும் இரண்டு கோடியே 20 இலட்சம் மக்களும் மாண்டு போயிருந்தால், இதனை விடச் சிறப்பாக இருந்திருக்கும். இப்படிச் சாப்பிடவும், பருகவும் முடியாது, தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப இயலாது, அன்றாடம் சாப்பிட ஒன்றும் இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அப்படியான மிக மோசமான நிலைமைக்கு நாடு சென்றுள்ளது.
இதனால், மக்கள் வெடிகுண்டு அல்லது விடுதலைப்புலிகளின் தோட்டாக்களில் இறந்து போயிருந்தால், இதனை விட நலமாக இருந்திருக்கும்.
இந்த நாட்டின் மீதும் மக்கள் மீதும் சிறிதளவேனும் அன்பு இருக்குமாயின் தயது செய்து நீங்கள் இராஜினாமா செய்து விடுங்கள் எனவும் நடிகர் கயான் விக்ரமதிலக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
