வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் புதிய திட்டம்
கோல்டன் பரடைஸ் விசா திட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றிற்கு வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா இன்று இடம்பெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற்றது.
அங்குரார்ப்பணம்
இதன்போது கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
செயல்முறைகள் எளிமையாக அமையும்போது, கோல்டன் பரடைஸ் விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களை கவரும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சிக்கலற்றதாக இருக்கும்போது, அது மேலும் நம்பிக்கைக்குரியதாக அமையும் எனவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்ச்சியான நன்மைகளை அனுபவிப்பார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டமாது முதலீட்டாளர்கள் இலங்கை தீவின் நன்மைகளை அனுபவிக்கும் அதேவேளையில், வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு பங்களித்து பலன்களைப் பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நீண்ட கால திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

