இந்தியாவில் பட்டம் பெற்றவர்களுக்கு அடித்த அதிஷ்டம் -அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு கைமேல் பலன்
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த இந்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற இலங்கை பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இன்று(27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்த அனர்த்தம்

கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டு பட்டதாரிகள் என நிராகரிப்பு

இது தொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பட்டதாரிகள் நியமனத்தின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.