கோட்டாபயவின் மீள் அரசியல் மற்றும் சிறிலங்காவின் அடுத்த பிரதமரை நியமிப்பது தொடர்பிலும் அமைச்சர் வெளியிட்ட தகவல்
மீண்டும் அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தீர்மானிக்க வேண்டும். அவர் செய்தவை சரியா, தவறா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தனது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
அடுத்த பிரதமர்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பல்வேறு நபர்கள் என்ன கூறினாலும் பிரதமரை மாற்றுவதற்கான எந்த தயார் நிலைகளும் இல்லை.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன, அனுபவமிக்க அரசியல்வாதி என்பது அவர் தமது செயலில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்கவே ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜாங்க அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளமே கிடைக்கும். தற்போதைய கஷ்டமான நேரத்தில் நாட்டுக்காக அர்ப்பணிப்புகளை செய்ய நாங்கள் அனைவரும் தயார்.
சில அமைச்சுக்களுக்கு பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு அமைச்சரால் சகல நிறுவனங்களையும் கண்காணித்து விடயங்களை தேடி அறிய முடியாது. இதனால், மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போது பணியாற்றுவது சுலபம்.
இந்த நியமனங்களால் செலவுகள் அதிகரிக்கும் என்று எவரும் குற்றம் சுமத்த முடியாது. அப்படியானால் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும். அரச அதிகாரிகள் எம்மை விட அதிகளவான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெறுகின்றனர்.
முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் நாட்டில் எதிர்மறையான பொருளாதாரம் காணப்பட்டது. அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதாக எம் மீது குற்றம் சுமத்தும் அனுரகுமார திஸநாயக்க போன்றவர்கள் அந்த நேரத்தில் அமைச்சு பதவிகளை பெற்றனர். இது எதிர்க்கட்சியின் போராட்ட கோஷம் மாத்திரமே.
இடைக்கால வரவு செலவுத்திட்டம்
இந்த நேரத்தல் நாட்டின் அனைவருக்கும் பொருளாதார சிரமங்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவே நாங்கள் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வந்தோம்.
அதேபோல் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிலவும் பொருளாதார நிலைமையை முகாமைத்துவம் செய்துக்கொண்டு அதன் ஊடாக மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு போல் போராட்டகாரர்களுக்கும் இன்னும் ராஜபக்ச அச்சம் இருக்கின்றது. நாட்டின் அமைதியான போராட்டகாரர்களுக்கு அமைப்பு ரீதியான மாற்றம் தேவைப்பட்டது. அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காகவே கோட்டாபய ராஜபக்ச அதிபராக தெரிவு செய்தனர்.
நாமல் தகுதியானவர்
நாமல் ராஜபக்ச அமைச்சராக பதவி வகிப்பது தகுதியானது என நான் நினைக்கின்றேன். எனினும் அவர் அமைச்சு பதவியை பெறுவாரா மாட்டாரா என்பது எனக்கு தெரியாது.
அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் மூலம் முதலிடத்தை பெற்றவர். இதனால், அமைச்சர் பதவியை வகிக்க அவருக்கு தகுதி இருக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பலவீனமான தலைவர். அவர் சாவல்களை பொறுப்பேற்க அஞ்சுபவர். வெளியில் பேசிக்கொண்டிருக்காமல், சவாலை ஏற்று எங்களுடன் பணியாற்றுமாறு நாங்கள் கூறினோம்.ஆனால், அவருக்கு பயம்.அனுரகுமார திஸாநாயக்கவும் அப்படியே ", எனக் குறிப்பிட்டார்.
