பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் கோட்டாபய!
முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜூன் 9 மக்கள் புரட்சி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்று முன் தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார் சபாநாயகர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக அரச தலைவரால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அரச தலைவர் பதவி விலகுவது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.