அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத வேதனத்தை நாளை மறுதினம் (10.04.2025) வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தின் அடிப்படையில், பாதீட்டில் திருத்தம் செய்யப்பட்ட வேதனத்தை அன்றைய தினம் வழங்க முடியாவிட்டால், அந்த நிலுவைத் தொகையை ஏப்ரல் 25 ஆம் திகதியன்று வழங்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு
இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் படி, அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக 9,500 ரூபாவால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
