பண்டோரா ஆவண விவகாரம்! சர்வதேச விசாரணை வேண்டும் - சபையில் முழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்
பண்டோரா மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச மட்ட விசாரணையை மேற்கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ( Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
முறையற்ற விதத்தில் நிதி சேகரித்தல், வரி செலுத்தாமை மற்றும் பணச் சலவை உட்பட இரகசிய நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களை வெளிக் கொண்டுவரும் பண்டோரா ஆவணம் ஊடாக இலங்கையிலுள்ள சிலரின் நிதி பரிவர்தனை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, இலங்கையின் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பண்டோரா பத்திரங்களின் மூலம் வெளிவந்துள்ள சொத்துக்கள் தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பல நாட்டுத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் இது தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கும் முடிவு செய்துள்ளன.
உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்ற நாடுகளும் அவ்வாறு கூறுகின்றன.
அத்தியாவசிய உணவுகள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வரிசையாக நின்றுகொண்டு அவதிப்படும் பொதுமக்களை நாடுபூராவும் காணக்கூடியதாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஆசிரியர்கள் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலம் அவர்களது தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.
கொரோனா பேரழிவு காரணத்தால் பதின்மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதுடன் மருந்து மாபியா காரணத்தால் மேலும் பல்வேறுபட்ட நோயாளர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
என்பதுடன் நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் வங்குரோத்து நிலைமையிலேயே உள்ளது. இத்தகைய நேரத்தில் ஒரு பெரிய மோசடி தொடர்பான காரணங்கள் பண்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, இந்த பெரும் மோசடியின் உண்மையான விடயங்களை நாடு அறிய வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம்.
வக்குரோத்து மற்றும் அற்ப அரசியல் பேச்சுக்கள் இல்லாமல் இந்த உண்மையை வெளிப்படுத்துங்கள்.
எனவே, பண்டோரா மோசடிக்காரர்களைத் தேடும் உண்மையான நடுநிலை, வெளிப்படைத் தன்மையுள்ள, சர்வதேச அங்கீகாரத்தை ஒத்த விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
