ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக் கழகத்தின் கெளரவிப்பு விழா (படங்கள்)
சுவிற்சர்லாந்தில் ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக் கழகம் வழங்கிய கெளரவிப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
ஐரோப்பாவில் புலம்பெயர்தமிழர்கள் பலசாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி,செல்வம்,வீரம் என அவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் உலக அரங்கில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அப்படித் தன்னலம் கருதாமல் உழைக்கும் சாதனையாளர்கள் பலரை ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக் கழகம் இனங்கண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது.
இந்த ஆண்டு சுவிஸின் தலைநகர் பேர்னில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆளுமையாளர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த விழாவின் முதன்மை விருந்தினராக திரு.முருகவேள் பொன்னம்பலம், சிறப்பு விருந்தினர்களாக திரு.கனகரவி, திரு.சண்முகராஜா,திரு.ஜெயக்குமார், திரு.குருபரன், மற்றும் கெளரவ விருந்தினர்களாக திரு.தில்லை தேசிகன், திரு.நரேந்திரன்,திரு.மனோகரன், திரு.இனியவன் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
குறித்த கெளரவிப்பு நிகழ்வில்..
சிறந்த கராத்தே ஒருங்கணைப்பாளராக திரு.கெளரிதாசன் விபுலானந்தன்,
சிறந்த அரங்கப்பாடகராக திரு.மகேந்திரன் சிவசம்பு,
சிறந்த அரங்கக் கலைஞராக திரு.ரமணதாஸ் சத்தியநாதன்,
சிறந்த கராத்தே வீராங்கனையாக செல்வி.நிசாலினி சிறிபாலன்,
சிறந்த முற்போக்குச் சிந்தனையாளராக திரு.சுஜித் கணேசபாலன்(இங்கிலாந்து),
சிறந்த இயற்கை வளம் காப்பாளர்களாக திரு.சசிகரன் மனோகரன்(இலங்கை), திரு.சிறிதரன் கணபதி(சுவீடன்),
சுவிற்சர்லாந்து அரசின் இலக்கியப் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா (கலாநிதி கல்லாறு சதீஷ்) சிறந்த இலக்கியம் மற்றும் வணிகத்துக்கான ஆளுமை எனும் விருதைப் பெற்றுக்கொண்டார்.
விருதினைப் பெற்றுக்கொண்ட கலாநிதி கல்லாறு சதீஷ் தனதுரையில்;”தேசமற்றவர்களாகத் உலகமெங்கும் வீசப்பட்டிருக்கும் தமிழ் இனத்திற்கு இது போன்ற விருதளிப்பு விழாக்கள் அவர்களை மேலும் உற்சாகமாக உழைக்க வைக்கும்” என்று வாழ்த்துக் கூறியதுடன், விழா ஏற்பாட்டாளர் திரு.வைகுந்தன் செல்வராஜா அவர்களின் இந்தச் சமூக சேவையைப் பாராட்டி அனைத்து விருந்தினர்களுடனும் இணைந்து பொன்னாடை போற்றிக் கெளரவித்தார்.
ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்புக் கழகம் திரு.வைகுந்தன் செல்வராஜா எனும் விளையாட்டு வீரரைத் தலைவராகக் கொண்டு இரண்டாவது முறையாக விருதளிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் விழாவினை திரு.பாஸ்கரன், மற்றும் திரு.கவிதரன் ஆகியோர் இணைந்து அழகே தொகுத்து வழங்கியிருந்தனர்.







