விழுந்த இடத்தில் இருந்து பயணம்! ரணிலுக்கு நெருக்கமானவர் சூசகமான பேச்சு
நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மாற்றவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என முன்னாள் நிதியமைச்சரும், அதிபருக்கு நெருக்கமானவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், மாறாக பேச்சுவார்த்தைகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடி தொடர்பிலும், அதன் மீட்சி தொடர்பிலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2015இல் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினைகளை நாம் தீர்த்தோம். மக்கள் வரிசைகளை இல்லாது செய்தோம். எனினும் தற்போது மீண்டும் அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு பின் இவை குறைக்கப்பட்டு வருகின்றன. வரிசை யுகத்தை முற்றாக இல்லாமல் செய்ய அவரால் மாத்திரமே முடியும்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது காலத்தின் தேவை
விழுந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு என்னால் செய்ய முடியுமானவற்றை நான் ஒரு தனிநபராக செய்வேன்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது காலத்தின் தேவை. இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும், இதனை அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக செயன்முறை படுத்தக்கூடாது. மாறாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக செய்ய வேண்டும்.
தனித்தனி கட்சியாக யோசிக்காமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும்.
விழுந்த இடத்தில் இருந்து பயணம்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல வருடங்கள் தேவைப்படுகின்றன. எனினும், அவற்றை உடைத்து நாட்டை இல்லாமல் செய்ய ஐந்து நிமிடங்கள் போதும்.
எனவே, பழைய கதைகளை பேசாமல் இப்போது விழுந்த இடத்தில் இருந்து எப்படி எழும்புவது என்று நாம் பார்க்க வேண்டும். இருட்டில் இருக்கும் நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இளைஞர்களுடன் சேர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.