உலகக் கோப்பை அரையிறுதி! மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு சவால் விடுக்கும் இங்கிலாந்து
1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்த்து அரையிறுதியில் மோத தயாராகியுள்ளது.
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு பயிற்சியாளர் தோமஸ் டுசெல் தலைமையிலான இங்கிலாந்து அணி, காலிறுதியில் நோர்வேயை கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் போது இரண்டு முறை பின்தங்கிய நிலையிலும் மீண்டு வந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் போராட்ட மனப்பான்மையை டுசெல் பாராட்டியுள்ளார்.
கேன் - பெலிங்காம் அசத்தல்
இந்தத் தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு தலைவர் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்காம் ஆகியோர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இருவரும் தலா 6 கோல்களைப் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் பெலிங்காம் 4 கோல்களை அடித்துள்ளார்.
எனினும் நோர்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கும் இருந்ததாகவும் தோமஸ் டுசெல் தெரிவித்திருந்தார்.
அர்ப்பணிப்புடன் விளையாடிய வீரர்கள்
இதற்கு அதிருப்தி தெரிவித்த ஜூட் பெலிங்காம், வீரர்கள் களத்தில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியதாகவும், அதனை பயிற்சியாளர் உரிய முறையில் மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அணியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது தனது பொறுப்பு என டுசெல் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியில் டெக்லன் ரைஸ் உள்ளிட்ட சில வீரர்கள் உடல்நலக் குறைவு மற்றும் தசைப்பிடிப்பு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரையிறுதியில் முழு திறனையும் வெளிப்படுத்த அணி தயாராக இருப்பதாக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டினா அணி
மறுபுறம், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தலைமையிலான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்தை கூடுதல் நேரத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

67ஆவது நிமிடத்தில் சமநிலை ஏற்பட்ட போதிலும், கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லவுடாரோ மார்டினஸ் அடித்த கோல்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தன.
போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிப்பது தங்கள் அணியின் இயல்பாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
கடினமான போட்டிகளில் பெற்ற அனுபவமே தற்போது அணிக்கு பலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா அணி பங்கேற்ற கடந்த ஆறு முக்கிய சர்வதேச தொடர்களிலும் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இப்போது உலகக் கால்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது, ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தா அல்லது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவா இறுதிப்போட்டிக்கான பாதையை தக்கவைக்கும் என்பதையே.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |