சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து கோரிக்கைகளை முன்வைத்து நீதி கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் இன்று (14.02.2025) காலையில் ஆரம்பித்துள்ளார்.
அழகரத்தினம் வனகுலராசா என்னும் ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி ஒருவரே முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர் மற்றும் உணவு இல்லாமல், நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராளியின் கோரிக்கைகள்
இதன்போது, அவர் முன்வைத்துள்ள 10 கோரிக்கைகள் பின்வருமாறு,
1. தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்.
3. மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
5. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
7. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாக கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சகபோராளிகளை காரணம் காட்டி பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம், பண்ணை அமைத்து, வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு 200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
8. முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.
10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)