நெருக்கடியான நேரத்தில் பிரதமர் பதவியை பொறுப்பேற்றது ஏன் - ரணில் வெளியிட்ட தகவல் (காணொலி)
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
தற்போதைய நெருக்கடியான நேரத்தில் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை விட பொருளாதார நெருக்கடியை முதன்மைப்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (05) இந்திய என்டிடிவி ஊடகத்துடனான பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உணவு, எரிபொருள், உரம், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு பணம் செலுத்த வேண்டிய அவலநிலையில் உள்ள இலங்கை, அந்நிய செலாவணி பற்றாக்குறையுடன் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு நன்றி
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதி உள்ளிட்ட தற்போதைய சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்ற போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மக்களின் நெருக்கடி மற்றும் அதனால் ஏற்படும் அரசியல் ஸ்திரமின்மைக்கு தேவையான அரசியல் உரையாடல்களை விட நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.