அடித்தால் திருப்பி அடியுங்கள் - மனோ கணேசன் ஆவேசம்
அடித்தால் திருப்பி அடியுங்கள் என மலையக மக்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வீராவேசமாக தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்று நூல் (மலையக தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு) அறிமுக நிகழ்வு இன்று (20.08.2023) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
மலையக தமிழருக்கு தேவைப்படுவது நியாயம்

மலையக தமிழருக்கு தேவைப்படுவது அனுதாபம் அல்ல எங்களுக்கு தேவைப்படுவது நியாயம். நேற்று காலையில் மாத்தளை மாவட்டத்தில் ரத்வத்த என்ற தோட்டத்தில் கீழ் பிரிவில் ஒரு அராஜகம் நடந்துள்ளது தோட்டத்தில் நிற்கக்கூடிய உதவி முகாமையாளர் வீடொன்றை இடித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு வீரம் விளைந்த மண்ணில் இருந்து மலையக மக்களுக்கு நான் சொல்கின்றேன் உங்களுக் அடித்தால் திருப்பி அடியுங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தற்பாதுகாப்புக்காக நீங்கள் திருப்பி அடிப்பதற்கு உரிமை உண்டு. இனிமேல் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்.
காணி உரிமை, கல்வி உரிமை,வீட்டு உரிமை மலையக தமிழ்மக்களுக்கும் தேவை. இலங்கையில் வெளிநாட்டு நிதி இல்லை கஜானா காலியாக இருக்கின்றது திருடிவிட்டு போய்விட்டார்கள். ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகளவான வெளிநாட்டு நிதியம் இருந்தது இலங்கையில்தான் அதை வைத்துக்கொண்டுதான் மாறி மாறி வாரி வாரி இறைத்து அரசு ஆட்சி செய்தார்கள். அன்று இலங்கையில் இருந்த ஏற்றுமதி துறையான தேயிலை, இறப்பரால் தான் இந்த வருமானம் வந்தது. இதனை ரணில் விக்ரமசிங்கவிற்கு பலதடவை நினைவுபடுத்தியுள்ளேன்.
ஈழத்தமிழர்களையும், முஸ்லிம்களையும், மலையக தமிழர்களையும் சிங்கள சகோதரர்களையும் சேர்த்தால்தான் இலங்கை என்று வருகின்றது. எங்கள் மலையக மக்களின் வரலாறும் இலங்கை பாடவிதானத்தில் இடம்பெறுவதற்கான ஆக்க நடவடிக்கைகளை நிச்சயமாக நாங்கள் எடுப்போம். அடுத்து நடைபெறும் கல்வி அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் இதனை கவனத்தில் கொண்டுவருவேன்.
இலங்கை தேசியம் எப்படி உருவாகிறது

ஈழத்ததமிழர் ஒருதேசிய இனம், மலையகத்தமிழர் ஒரு தேசிய இனம்,முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் சிங்கள மக்கள் ஒருதேசிய இனம் இந்த நான்கு தேசிய இனம் சேரும்போதுதான் இலங்கை தேசியம் உருவாகின்றது.
பின்தங்கி இருக்கக்கூடிய பெருந்தோட்ட தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது. சரியான எதிர்காலம் வரும்போது ஈழத்தமிழர்களும் மலையக தமிழர்களும் கரம்கோர்க்கவேண்டும். இலங்கைத்தமிழன் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்படவேண்டும் சகோதர முஸ்லிம்மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் அதேபோல சிங்கள மக்களும் அனுபவிக்கவேண்டும்
எங்களை தவிர்த்துவிட்டு எப்படி இலங்கை இல்லையோ அதேபோல் சிங்கள மக்களை தவிர்த்துவிட்டும் இலங்கை இல்லை. எல்லோரையம் ஒருமுகப்படுத்தக்கூடிய சிந்தனை தூரநோக்கு துணிச்சல் அனைத்தும் எங்களுக்கு நிச்சயமாக இருக்கின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார்..
அடித்தால் திருப்பி அடியுங்கள் என மலையக மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.