அரச நிலத்தில் வர்த்தக நிலையம்: வவுனியா மாநகரசபை மீது பகிரங்க குற்றச்சாட்டு
வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகர சபை செயலாளருக்கு பலரும் முறைப்பாடு செய்தும் அவர் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின் மேயர், பிரதி மேயர் மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் செயலாளரிடம் தெரியப்படுத்தி இருந்ததுடன் சம்பவ இடத்திற்கும் சென்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும், மீண்டும் அதன் கட்டுமான நடவடிக்கைன் இடம்பெற்ற நிலையில் எதிர்கட்சி உறுப்பின்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, அனுமதியின்றி மாநரசபை கட்டளையை மீறி கட்டப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட உதவித் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் நிர்வாகம் அதனை செயற்படுத்தாது அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போதும் மாநகர சபை உயர் அதிகாரிகள் அதனை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள தவறியியமையால் அவை அகற்றப்படாமல மாநரசபை உத்தியோகத்தர்களும் மற்றும் வாகனமும் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |