கோட்டாபயவுக்கு கிடைத்த சட்டவிரோத சலுகை! வெளிச்சத்துக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் ஊழல்
அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்சவிற்கு 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டவிரோதமான சலுகையையும் ஆதரவையும் வழங்கிய விவகாரம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும், முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுப் பணிப்பாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு எதிராகவே இந்த குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த இருவரும் தங்களது பதவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகம்
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 41 வது பிரிவின் கீழ் மகிந்த தேசப்பிரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் தங்களது அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு முன்னர் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தகுதியற்றவர்கள் ஆவர். இதன்போது அந்த தேர்தலில் (2019) போட்டியிட 36 பேர் இருந்தனர்.
அவர்களில் இருவர் வெளிநாட்டுப் பிரஜைகளாவர். ஒருவர் பிரித்தானிய பிரஜையான நாகானந்த கொடித்துவக்கு மற்றயவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ச.
அரசியலமைப்பின் 103(2) விதியின்படி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான பொறுப்பாகும். மேலும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 12 வது பிரிவின்படி அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியலமைப்பின் 91 வது விதியின்படி இந்த நாட்டின் பிரஜை அல்லாதவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது.
இதற்கமைய அது தொடர்பான உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 14 வது பிரிவின்படி தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களின் தகுதிகள் ஆராயப்படாத பட்சத்தில் எந்தவொரு எதிர்த்தரப்பு வேட்பாளரும் வேட்புமனு ஏற்கும் நேரத்தில் ஆட்சேபனையை முன்வைக்க முடியும்.
ஆணைக்குழு முடிந்தவரை விசாரணை நடத்தி தனது முடிவையும் அதற்கான காரணங்களையும் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு அறிவிக்க வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடவிருந்தனர்.
கோட்டாபய ராஜபக்ச
நாகானந்த கொடித்துவக்கு மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய இருவர் குறித்தும் அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்லாததால் இதற்கு தகுதியற்றவர்கள் எனக் கூறி 2018 மே 13 அன்று ஓஷல ஹேரத் என்பவரால் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டிருந்த அவர் 2019 செப்டம்பர் 20 அன்று தனது குடியுரிமையைத் துறந்ததற்கான சான்றிதழை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச தனது வெளிநாட்டுக் குடியுரிமையைத் துறந்ததற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ ஆவணத்தையும் அல்லது சான்றிதழையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி இருவர் பிணைப்பணம் செலுத்தியிருந்தனர்.
ஒருவர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றயவர் அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ச ஆவார்.
அமெரிக்க குடியுரிமை
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இரண்டு சத்தியக்கடதாசிகள் மூலம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது அவர் குடியுரிமையைத் துறந்ததற்கான எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணத்தையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இரு சத்தியக்கடதாசிகளும் இம்முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஒரு சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்கிறார்.
அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தேர்தல் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பெடரல் ரெஜிஸ்டர் (Federal Register) மூலம் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2019 ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |