தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்
இலங்கையில் நடைபெறும் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் (Coconut Development Authority) தலைவர் சாந்த ரணவக்க (Shantha Ranawaka) தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை தடை செய்யும் நோக்கில் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையான தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் யார், உற்பத்தி உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் என்பன உள்ளடக்கப்படாது விற்பனை செய்யவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் பல்வேறு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தரமற்ற எண்ணெய் வகைகளை நுகர்வதனால் பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
சந்தையில் விற்பனை
எனவே தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் உற்பத்திகளில், உற்பத்தியாளர் யார் என்பது பற்றியும், உள்ளடக்கம் என்ன என்பது பற்றியும் தகவல்கள் காட்சியாகும் வகையில் விற்பனை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்த சில மாத கால அவகாசம் வழங்கப்படும் பின்னர் நடைமுறை கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் கலப்பு எண்ணெய் வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

