போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! விளக்கமறியலில் நீடிப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (27) சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் கச்சதீவு மற்றும் நெடுந்தீவிற்கும் இடையே மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 1 விசைப்படகையும் அதிலிருந்து 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
அவசர ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (28) ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி டோக்கன் அலுவலகம் முன்பு மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் முன்னிலையில் பல்வேறு பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் மீனவர்களின் விசைப்படகையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்திய இலங்கையின் மீனவர்களின் பேச்சு வார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திங்கட்கிழமை (29) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
மன்னார் நீதவான் உத்தரவு

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களும் நேற்று திங்கட்கிழமை (29) காலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.