இந்தியா இலங்கையின் இரட்டை சகோதரன் : உயர் ஸ்தானிகர் விபரிப்பு
இந்திய அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் நலனுக்காக நாடு தழுவிய ரீதியில் எந்தவித பாகுபாடும் இன்றி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா இலங்கையின் மூத்த சகோதரன் அல்ல, அதன் இரட்டை சகோதரன் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) தெரிவித்துள்ளார்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (20) காலை மல்வத்து பார்ஸ்வ திப்பட்டுவாவே மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்கர் மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மஹானாஹிமி ஆகியோரை தரிசித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலால் தாமதமான திட்டம்
தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த திட்டத்தை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் மானிய உதவியில் தற்போது நான்காயிரம் பௌத்த விகாரைகள் மற்றும் எண்ணூறு கோவில்களில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் மூவாயிரம் கோவில்களுக்கு சோலார் பனல்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இராமர் பாலத்தால் ஆபத்தில்லை
இந்தியாவையும் இலங்கையின் வடக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள பாலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதா என மல்வத்து மகா நாயக்கர் கேட்டதற்கு, இது இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு அச்சுறுத்தலான திட்டம் அல்ல, பாதுகாப்பே என்று சந்தோஷ் ஜா பதிலளித்தார்.

இலங்கை மக்களின் விருப்பத்தின்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இலங்கைக்கு இந்திய அரசின் ஆதரவு அவ்வாறே தொடரும் என்றும் பரஸ்பர உறவுகள் மேலும் வளரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |