சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் (படம் இணைப்பு)
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டணம்’ போர்க்கப்பலை இன்று முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு சீனா குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
சில பொறுப்பற்ற நாடுகள் கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவை சுட்டிக்காட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசினார்.
ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலானது ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள Mazagon Dock கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத்துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த போர்க்கப்பல் நவீன கருவிகள், வசதிகள் நிறைந்தது ஆகும். மேலும் ரேடர்களால் கண்டுபிடிக்க இயலாத, எதிரியை அழிக்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உடைய இந்த போர்க்கப்பல் 7400 தொன் எடை கொண்டதாகும்.
இக்கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தோ பசுபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமையை தரவல்லதாகும்.
முக்கியமாக இந்த கப்பல் அணு, உயிரியல் மற்றும் வேதியியல் பண்புகள் கொண்ட போர்களுக்கு ஏற்றதாகும். இந்தியாவில் கட்டப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் இதுவே பெரியதாகும். ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத், சில பொறுப்பற்ற நாடுகள் கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் இந்தியாவை உள்நாட்டு கப்பல் கட்டும் மையமாக உருவாக்க எல்லா வாய்ப்புகளும் தம்மிடையே உள்ளது எனவும் தெரிவித்தார்.