ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா..!
இலங்கையில் பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
2017 இல் மாகாண சபைகளின் ஆயுட் காலம் முடிந்ததில் இருந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போது இருந்த மைத்திரி – ரணில் அரசும் சரி, அதன் பின் உருவான கோட்டாபய அரசும் சரி அந்தத் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2017 இல் இது தொடர்பில் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அதை நிறைவேற்றுவதற்கு அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலமும் நிறைவடைந்துள்ளது.
இந்தியா அழுத்தம்
அந்தத் தேர்தலை நடத்துவதற்குக்கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கவனமோ அதிபர் தேர்தலை நடத்துவதில்தான். அதற்கான ஏற்பாடுகளை அதிபர் செய்து வருகின்றார்.
இந்தநிலையில்தான் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்று அறியமுடிகின்றது.
