சூடுபிடிக்கும் அரசியல் களம்: ரணிலை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இலங்கைக்கு (srilanka) விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (30.8.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் (Sagala Ratnayaka ) கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்
இதேவேளை இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (National Security Advisor of India) அஜித் தோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை.
இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றும் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) உறுப்பு நாடுகளான இலங்கை, இந்தியா, மாலைதீவு மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகள் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
