வலுப்பெற்றது இந்திய - இலங்கை உறவு : சாகல ரத்நாயக்க பெருமிதம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளதாக அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
இந்தியாவின் உதவி அளப்பரியது

‘‘நமது அயல் நாடான இந்தியா எமக்கு பெருமளவான உதவிகளைச் செய்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது.
இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை எம்மால் உணர முடிந்தது.
அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.
அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றத் தீர்மானித்துள்ளன.
கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருந்த போது, எமது கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன.
விமானங்கள் மற்றும் மற்றைய இயந்திரங்களையும் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்தியில் விமானப் படையின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக அமைந்திருந்தது.
புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய எமது விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை.
அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
மது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் எமக்கு பெருமளவான பொறுப்புகள் காணப்படுகின்றன.
நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் தினமும் மாற்றமடைவதால், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டியுள்ளது.
பாதுகாப்புத் தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும்

சிறிலங்கா கடற்படை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கூட தற்போதுள்ள நெருக்கடிகள் எவையும் இருக்கவில்லை. யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா விமானப் படை மீது சார்ந்திருந்த பணிகள் வேறுபட்டவையாகும்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் காலத்துடனான மாற்றங்களுக்கு இணையாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கத் தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் அதிபரால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
அதற்கு மேலதிகமாக மணல் வியாபாரத்தை தடுக்கவும் வனவள கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அவதானம் செலுத்த வேண்டும்.
எமது நாடு சூரிய சக்தியும் காற்று வலுவும் நிரம்பிய நாடாகும்.எனவே அவற்றைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு நாட்டு மக்களுக்கும் படையினருக்கும் உள்ளது.’’ என்று மேலும் தெரிவித்தார்.