உச்ச நிலைக்கு உயர்த்தப்பட்ட எச்சரிக்கை! வெளிநாடொன்றை கதிகலங்க செய்யும் எரிமலை
இந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த ஜாவா தீவில் அமைந்துள்ள செமெரு எரிமலையில் புதன்கிழமை தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தையடுத்து, அந்தப் பகுதிக்கான அபாய எச்சரிக்கை உச்ச நிலையிற்கு உயர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்த எரிமலை நண்பகல் முதல் மாலை வரை பலமுறை வெடித்து, சூடான சாம்பல் புகை, பாறைகள் மற்றும் எரிமலைக்குழம்பு 7 கிலோமீற்றர் தூரம் வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபாய நிலை
அத்தோடு, அதிலிருந்து சாம்பல் புகை 2 கிலோமீற்றர் உயரம் வரை எழுந்ததாகவும், இதனால் அருகிலுள்ள பல கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Xinhua
இதன் விளைவாக, ஏற்கனவே இரண்டு முறை உயர்த்தப்பட்டிருந்த அபாய நிலை மூன்றாவது கட்டத்திலிருந்து நேரடியாக உச்ச நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு அமைப்பு அறிவித்தது.
எவ்வாறாயினும் இதுவரையில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 கோடி மக்கள்
மகாமேரு என அழைக்கப்படும் செமெரு எரிமலையில் கடந்த 200 ஆண்டுகளில் பலமுறை சீற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் சரிவுப் பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

Image Credit: Reuters
27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியா, பசிபிக் "நெருப்பு வளையம்" எனப்படும் நிலநடுக்க மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகமாக நடைபெறும் பகுதியில் அமைந்துள்ளது.
அதனால் அந்த நாட்டில் எரிமலைச் சீற்றங்களும் நிலநடுக்கங்களும் வழக்கமாக இடம்பெறுகின்றன.
[செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |