விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் இந்திய புலனாய்வு முகமை வெளியிட்ட தகவல்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி மனிதர்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்புபடுத்தி இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது அறிக்கையிடலை சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தமை தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை கவலையடைய வைத்துள்ளது.
இலட்சத்தீவில் இருந்து இலங்கை சென்ற மீன்பிடி கப்பலில் இருந்து கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் ராஜ் மற்றும் சௌந்தரராஜன் என அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் இந்தச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளே குறித்த கடத்தலை செய்துள்ளதாக என்.ஐ. ஏ சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாடு, இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளில் அமைந்துள்ள அமைப்பின் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் இரகசியமாக வேலை செய்து வந்ததாக அந்த அமைப்பு கூறுகின்றது.
இந்திய கடலோர காவல்படையினர் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அரபிக்கடலில் இலங்கை மீன்பிடி கப்பலான ரவிஹன்சியை தடுத்து நிறுத்தி, ஏராளமான போதை மருந்துகள், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் எம்எம் அளவுள்ள வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இதன்போது ஆறு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், இந்த வழக்கு பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் போதைப்பொருள், தங்க கடத்தல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.