இன்ஸ்டாகிராம் எடுத்த அதிரடி நடவடிக்கை: கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு
உலகிலுள்ள இளம் பயனர்களின் நிகழ்நிலை பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட பதின்வயதினர் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டை மெட்டா (Meta) அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடு
இதன்படி, பதின்ம வயதினரின் கணக்குகளின் சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் நேரலை ஒளிபரப்புகளைத் தொடங்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேரடி செய்திகளில் சாத்தியமான ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் (Blur) வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும் என கூறப்படுகின்றது.
சமூக ஊடக தளங்களின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளைத் தணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரின் கணக்கு
முன்னதாக, மெட்டா கடந்த செப்டம்பரில் இன்ஸ்டாகிராமிற்கான பதின்ம வயதினரின் கணக்குகளுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
உலகளவில் சுமார் 54 மில்லியன் பதின்வயதினர் ஏற்கனவே இந்த டீன் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் இந்த டீன் கணக்குகள் அமைப்பு முகநூல் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்றைய மெட்டா தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
