நான்காவது வெற்றியை தன்வசமாக்குமா சிஎஸ்கே..!
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் துடுப்பாட்ட தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும்.
இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
பிளே-ஓப்
லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஓப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 29-வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
சென்னை அணி
துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வி அடைந்தது.
அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை வென்றது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்தது.
இன்றைய போட்டி
மொத்தத்தில் 4-வது வெற்றியை பெற சென்னை அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணியும் களம் காண உள்ளதால் இன்றைய போட்டி எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
