மற்றுமொரு ராஜபக்ச பதவி விலகுகிறாரா --! வெளியான அறிவிப்பு
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் தமக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் மற்றுமொரு ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் எந்தவொரு ராஜபக்சவும் தமது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக தோற்றம் பெற்றதை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இம்மாதம் 9ஆம் திகதி ராஜபக்ச குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
