பற்றி எரியும் லெபனான் - வேட்டையாடும் இஸ்ரேல்: ஹோர்முஸ் நீரிணை மீண்டும் பூட்டு
லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்தும் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனானில் போர் தொடங்கியதிலிருந்து நடந்ததிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த வான்வழித் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் அமைதியைக் காணும் நோக்கில் ஈரானுடன் 15 நாள் போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே தொடங்கின.
இந்த போர்நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இறுதி ஊர்வலம் மீது தாக்குதல்
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக தெஹ்ரான் புதன்கிழமை பிற்பகலில் அறிவித்தது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, சமீபத்திய தாக்குதல்கள் ஒரு "படுகொலைக்கு" சமம் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் பெரிய தாக்குதல்களில் ஒன்று சைடாவில் உள்ள ஒரு கஃபே மீது நடத்தப்பட்டது, இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர்.
பால்பெக்கில், ஒரு இறுதி ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கடுமையான தாக்குதல்
இந்நிலையில், இஸ்ரேல், (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 254 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தாக்குல்களில் 1,100 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |