ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : ஒன்பது அணுவிஞ்ஞானிகளை போட்டு தள்ளியது இஸ்ரேல்
இஸ்ரேலிய(israel) இராணுவம் ஒன்பது ஈரானிய (iran)அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஒபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதல்களில் ஆறு அணு விஞ்ஞானிகளை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
எனினும் தற்போது ஒன்பது பேரும் "ஆரம்பத்தில்" கொல்லப்பட்டதாகக் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அணு குண்டைப் பெறுவதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள்
ஒன்பது பேரின் பெயர்கள் வருமாறு: அணுசக்தி பொறியியல் நிபுணர் ஃபெரேடூன் அப்பாசி(Fereydoon Abbasi), இயற்பியலில் நிபுணர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி(Mohammad Mehdi Tehranchi); வேதியியல் பொறியியலில் நிபுணர் அக்பர் மொட்டலேபி சதே(Akbar Motalebi Zadeh), பொருள் பொறியியலில் நிபுணர் சயீத் பார்ஜி(Saeed Barji), இயற்பியலில் நிபுணர் அமீர் ஹசன் ஃபகாஹி(Amir Hassan Fakhahi), உலை இயற்பியலில் நிபுணர் அப்துல்-ஹமீத் மினௌஷெர்(Abd al-Hamid Minoushehr), இயற்பியலில் நிபுணர் மன்சூர் அஸ்காரி(Mansour Asgari), அணுசக்தி பொறியியலில் நிபுணர் அஹ்மத் ரெசா சோல்ஃபாகரி தர்யானி(Ahmad Reza Zolfaghari Daryani), மற்றும் இயக்கவியலில் நிபுணர் அலி பகோய் கதிரிமி( Ali Bakhouei Katirimi)
“கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க அறிவு ஆதாரங்களாக இருந்தனர், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர்” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது..
அவர்களில் பலர் 2020 இல் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் “ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தந்தை” மொஹ்சென் ஃபக்ரிசாதேவின்(Mohsen Fakhrizadeh) வாரிசுகள் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
எஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளங்கள் தாக்குதல்களில் கணிசமாக சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் 150 க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அந்த அதிகாரி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் தொடர்பில் தடுமாறும் ஈரான்
இதேவேளை வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் இஸ்ரேலின் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
எனினும் அணுசக்தி நிலையங்கள் உட்பட ஈரானிய இராணுவ தளங்களை குறிவைத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
