மரங்கள் மீது மனிதர்கள் நம்பிக்கையை இழப்பது எதன் வெளிப்பாடு: இன்று சுற்றுச்சூழல் தினம் !
இன்றைய காலத்தில் அதிக வெம்மை காரணமாக நாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகிறோம். உலகம் அபிவிருத்தியை நோக்கி வேகமாக நகரும் வேளையில் இயற்கையாகவே உகந்த வாழ்வை வாழ முடியாத சூழலும் நிகழ்ந்து வருகிறது.
வளர்ச்சி என்பது வானுயர்ந்த கட்டடங்களும் அகன்ற தெருக்களும் என்ற வகையில் அர்த்தம் கொள்ளப்படுகின்ற காலத்தில் மரங்களை நடுவதும் சூழலில் உள்ள உயிரினங்களைக் காப்பதும் மிக அருகி வருகின்றது.
இதனால் நாம் வரும் காலத்தில் மனிதர்கள் வாழ முடியாத ஒரு சுற்றுச் சூழலை உருவாக்கி வருகிறோமா என்பதைக் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும்.
🛑 உலக சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) என்பது ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படும் நாளாகும்.
இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதும் எனக் கூறப்படுகிறது.
நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும்,வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை வலியுறுத்தி இந்நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.
🛑 மரங்கள் மீது நம்பிக்கை தீர்வதா?
கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் சில மரங்கள் தறிக்கப்படுகின்ற காட்சிகளை அண்மைய நாட்களில் கண்டேன். மரங்கள் வாகனங்களின்மீது மனிதர்களின்மீது சரிந்து விழும் என்ற அச்சம் காரணமாகவே மரங்கள் தறிக்கப்படுவதாக சொல்லப்பட்டன.
இந்த இடத்தில் மிகப் பெரியதொரு கேள்வி எழுந்திருந்தது. மரங்கள்மீது மனிதர்கள் நம்பிக்கையை இழந்திருப்பது எதன் வெளிப்பாடு? ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கு மரங்கள் அவசியமானவை. மரங்களின் சுவாசம்தான் மனிதர்களுக்கு மூச்சைக் கொடுக்கிறது. அப்படிப் பார்த்தால் மனிதர்களுக்கு உயிரைக் கொடுப்பதே மரங்கள் அல்லவா?
மரங்களை நம்பி மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதுதானே உண்மை. ஆனால் மரங்கள் தங்கள்மீது சரிந்து விழுந்து தம்மைக் கொன்றுவிடும் என்று மரங்கள்மீது நம்பிக்கையை இழந்து மரங்களை தறிப்பது என்பது மனிதன் தனக்கு தானே வைத்துக்கொள்ளும் பேரழிவின் சூனியமல்லவா? அந்த மரங்களுடன் எனக்குப் பல நினைவுகள் வந்து மறைந்தன. போரின்போது அடைக்கலம் கொடுத்த மரங்கள் அவை. நகரத்திற்கு வருபவர்களுக்கு இளைப்பாற இடமளித்த அந்த மரங்கள் துண்டு துண்டுகளாக அரியப்பட்ட காட்சி என்னை மாத்திரமல்ல தெருவால் சென்ற பல மனிதர்களுக்கும் துயரத்தைப் பெருக்கியதுதான்.
🛑 மனித நாகரகத்தில் காடு
மரங்கள் பற்றி நமக்கிருக்கும் இதே புரிதல்தான் காற்றின்மீதும் நிலத்தின்மீதும் கடலின்மீதும் நமக்கு இருக்கிறது. கடல் என்பது உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றன.
பிளாஸ்டிக்குகளை தின்ற மீன்கள் பிளாஸ்டிக் மீன்களாக மீனவனின் வலையில் சிக்கி நமது வயிறை வந்தடைகின்றன. சூழலில் நாம் ஏற்படுத்தும் இத்தகைய பாதிப்புக்கள் மீளவும் வந்த நம்மை அதே விதத்தில் பாதிக்கின்றது என்பதற்கு மேற்சொன்ன நிகழ்வும் சாட்சி. மனித வாழ்விலும் மனித நாகரிகத்திலும் காடு மிக முக்கியமானது. ஆனால் இன்றைக்கு காடழிப்பு உலகில் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது.
வனம் வாழ்வின் அகம் என்பார்கள். மரமானது வாழ்வதற்கு நிழலை மாத்திரம் தருவதில்லை. உணவை தருகின்றது. அருந்த நீரை தருகின்றது. பூமியின் இயல்பை பேண உதவுகின்றது. மனிதர்கள் மாத்திரமின்றி பல்வேறு உயிரினங்களும் வாழ மரங்கள் உதவுகின்றன. இன்றைக்கு காடுகள் மிக வேகமாக அழிக்கப்படுகின்றது. குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் காட்டு வளம் அழிகின்றது. அத்துடன் உலகின் தட்ப வெப்ப நிலையும் மாறி வருகின்றது.
🛑 எஞ்சியிருப்பது 30 வீதக் காடுகளே
மரங்கள் அழிக்கப்படுகின்ற வேகத்திற்கு புதிய மரங்கள் நாட்டப்படுவதில்லை. அத்துடன் இயற்கையான மரங்களை அழித்துவிட்ட அதற்கு ஈடாக மரங்களை மனிதனால் நாட்டவும் முடியாது. கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு வீத மரம் மாத்திரமே நாட்டப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன.
உலகில் 30வீத காடுகள்தான் இன்றுள்ளன. அத்துடன் உலகில் நிமிடம் ஒன்றுக்கு அறுபது கால் பந்து மைதான அளவுக்குரிய நாடுகள் அழிக்கப்படுகின்றன. காடழிப்பு என்பது பூமியின் வளங்களை அழிக்கின்ற செயலுக்கான அடிக்கோலாகும். இதிலிருந்தே குடிநீருக்கான தட்டுப்பாடும் வறட்சியும் ஏற்படுகின்றது.
இன்றைக்கு இந்தியாவில் வரட்சியால் விவசாயம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஈழத்திலும்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய நிலை இன்றில்லை. நீர் வளமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் கலாசாரத்திற்குள் 2009இற்கு பிறகான ஈழம் வந்திருப்பதும் அதிர்ச்சியான விசயமாகும்.
🛑 வருகின்ற தலைமுறைக்கான வாழ்வு
பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலிய எரிபொருட்களுக்குப் பதிலாக சூரிய சக்தியையும் இயற்கை சக்தியையும் பயன்படுத்த முடியும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இதைப்போல மின்சாரத்தையும் இயற்கையாக பெற்றுக்கொள்ளுகின்ற வழிமுறைகளை நோக்கி மனிதன் நகர வேண்டும். வளி மண்டலத்திற்கு மேலே வாயு நிலையில் காணப்படும் ஓசோன் படலம், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது.
பூமியில் மனிதன் செய்யும் நாசகார வேலைகளால் ஓசோன் படலத்தில் மாசு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும். இன்று உலகில் சுவாம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கு நாம் சூழலை பாழாக்கியதே காரணமாகும்.
அத்துடன் வன ஜீவராசிகளை பாதுகாப்பதும் பூமியை பாதுகாக்கின்ற வழி. பறவைகள், பட்சிகள், விலங்குகள் என அனைவருக்குமான பூமியில் அனைவருக்கும் இடமளிப்பதே பூமிக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது.
அவற்றை அழிப்பது என்பது மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்கும் நாசகார வேலையன்றி வேறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் நிலத்தை, மரத்தை, கடலை, நேசித்தததைப்போல அவர்கள் வழியில் நாமும் பூமியையும் அதன் சூழலையும் நேசிப்போம். சுனாமி, கொரோனா பேரிடர் போன்றவை பூமியை வேட்டையாடிய பிறகும் நாம் திருந்துவதாய் இல்லை. நாம் வாழுகின்ற சூழலை பாதுகாத்து வருகின்ற தலைமுறை, சுத்தமான காற்றைச் சுவாதித்து ஆரோக்கியமான வாழ்வை தொடர்வது நம் கையில்தான் இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
