காசாவில் இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல் : கொத்து கொத்தாய் பலியான உயிர்கள்
காசா (Gaza) முனையில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இராணுவ நடவடிக்கை
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ள நிலையில், இதில் 25 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனை
இந்தநிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று (20) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 53 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, போரை நிறுத்துவது, பணய கைதிகள் விடுதலை, நிவாரண பொருட்களை மேலும் அதிகரித்தல் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
