நிர்வாக முடக்கல் அவசியமற்றது - எதிர்க்கும் சிவசேனை தலைவர்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியினால் (ITAK) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை மறுதினம் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பில் கருத்துரைத்த சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம், நிர்வாக முடக்கல் போராட்டம் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
இது நாளாந்தம் உழைத்து வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் நிர்வாக முடக்கல் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
