யாழ். மாநகர முதல்வர் தெரிவு : உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் ஆட்சேபனை
யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவுக்கான கூட்டம் கோரம் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடைக்கால முதல்வர் தெரிவு
யாழ். மாநகர சபை ஒத்திவைக்கப்பட்டமை முறையற்றது என ஆட்சேபித்து இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய 20 உறுப்பினர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ். மாநகர சபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில் சட்ட ஏற்பாடுகளுக்குப் புறம்பாக உள்ளூராட்சி ஆணையாளர் கூடத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தமை நியாமற்ற ஒரு அறிவிப்பு என யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமான சபை அமர்வு - ஒத்தி வைக்கப்பட்டது முதல்வர் தெரிவு! |
உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக ஆட்சேபனை
இது தொடர்பாக உடனடியாகவே சபையில் தம்மால் ஆட்சேபனை பதிவு செய்யப்பட்ட போதிலும், தமது கோரிக்கையை புறக்கணித்து உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு, சபை மண்டபத்திலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.
எனவே உள்ளூராட்சி ஆணையாளர் இழைத்த தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர சபையின் 20 உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.