உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு
உலக இராணுவப் பேராசிரியர்களும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களும் உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற தேசியப் பாதுகாப்புக் கல்லூரிகளில் போரியல் கோட்பாடுகளைப் கற்பிக்கும் போது, பெரும்பாலும் மேற்கத்தைய அல்லது வியட்நாமிய, சோவியத் தளபதிகளின் உத்திகளையே உதாரணம் காட்டுவது வழக்கம்.
ஆனால், எவ்வித முறையான இராணுவக் கல்விக்கூடப் பின்னணியும் இன்றி, போர்க்களத்தின் அதிர்வுகளையும் எதிரியின் உளவியலையும் மட்டுமே தனது முதன்மைப் பாடப்புத்தகமாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நவீன போரியல் தந்திரோபாயங்களை மாற்றி எழுதிய ஒரு களமுனை நாயகன் ஈழத்து உருவாகினார் . அது விடுதலைப் புலிகளின் முதன்மைத் தரைப்படைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ்.
இன்று அவரது நினைவுநாளில், வெறும் உணர்ச்சிப் பெருக்குகளுக்கு அப்பால், சர்வதேச இராணுவக் கோட்பாடுகளின் பின்னணியில் பால்ராஜ் ஏன் ஒரு "போரியல் அதிசயம்" என்று வர்ணிக்கப்படுகிறார் என்பதை ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.
உலக இராணுவ வரலாற்றில் ஒரு கெரில்லாப் படை தனது வரலாற்றில் படிப்படியாக வளர்ந்து, தனது எதிரியின் பலம்பொருந்திய மரபுவழிப் படையணியை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளப் பலம்பெறும் தந்திரோபாய மாற்றத்தை மூன்றாம் கட்டப் போர்முறை (Third Phase of Warfare) என மாவோ சேதுங் மற்றும் ஜெனரல் வோ இங்குயென் கியாப் ஆகியோர் இராணுவ வரலாற்றுக்குறிப புகளில் வரையறுத்தார்கள்.
ஆனல் ஈழப் போர்க்களத்தை பொறுத்தவரை இந்த வியூகம் சாத்தியமானதற்குப் பின்னால் இருந்த முதன்மைப் போரியல் இயந்திரமாகத் தளபதி பால்ராஜ் விளங்கினார். ஒரு கொரில்லாப் போர் வீரனாகத் தன் பயணத்தைத் தொடங்கி, பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட மரபுவழிப் படையணிகளை வழிநடத்தி, எதிரியின் பிரம்மாண்டமான படைப்பிரிவுகளை நிலைகுலையச் செய்த அவரது ஆளுமை, சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆழமாகக் கற்கப்பட வேண்டிய ஒன்று.
ஒருமுறை , முன்னரங்க நிலையில் இருந்து தலைமையகத்துக்கு அனுப்பப்பட்ட ” பால்ராஜ் களத்தில் நிறக்கிறார்” என்ற இராணுவச் செய்தியை விடுதலை புலிகள் இடைமறித்துக் கேட்டனர். அதற்கு தலைமையகத்தில் இருந்து ” மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.பால்ராஜ் பிரபாகரனை விடவும் மிகவும் ஆபத்தானவர் ” என்றே பதில் அனுப்பப்பட்டது. இடைமறித்துக் கேட்கப்பட்ட அந்த செய்தியை அறிந்தபோது தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்தார். கூச்ச சுபாவமுடைய பால்ராஜிடம் பிறகு தலைவர் ” இப்போது உன்னை முதல் எதிரியாக இராணுவம் கருதுகிறது. அதனால் எனக்கு ஆபத்தில்லை” என்று கூறிக் குறும்பு செய்தாராம்.
நவீன இராணுவக் கோட்பாடுகளின்படி,உலக இராணுவங்களில் ஒரு மேஜர் ஜெனரலோ அல்லது பிரிகேடியரோ போர்க்களத்தின் முன்னரங்கிற்கு செல்வது மிக அரிது. அவர்கள் தற்காப்பு அரண்களுக்குப் பின்னால், அதிநவீன தகவல் தொடர்புச் சாதனங்களுடன் கூடிய கட்டளை மையங்களில் அமர்ந்து கொண்டே வியூகங்களை வகுப்பார்கள். ஆனால் பால்ராஜ் இந்த இராணுவ விதியை முற்றாக உடைத்தெறிந்தார்.
பீரங்கிக் குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும் இடைவிடாது பாயும் ஆபத்து நிறைந்த உக்கிரமான போர்க்களத்தின் முனையிலேயே அவர் எப்போதும் நின்று தனது கட்டளைகளை வழங்குவார் . இவரது இந்த முன்னணித் தலைமைத்துவம் என்பது எப்போதுமே பிறர் கருதுவதுபோல் தற்கொலைக்குச் சமமானதல்ல, மாறாக அது வீரர்களின் மனவலிமையை நூறு மடங்கு உயர்த்தும் ஒரு உன்னதமான உளவியல் உத்தியாகும்.
தமது தளபதியே போர்க்களத்தில் நிற்கும் போது வீரர்கள் பின்வாங்க நினைப்பதே இல்லை என்ற இராணுவ உளவியலை அவர் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.
பிரிகேடியர் பால்ராஜின் போரியல் நடவடிக்கைகளில் உச்சமாக கூறப்படுவது 2000ஆம் ஆண்டின் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கச் சமராகும்.
உலக இராணுவ வரலாற்றில், எதிரியின் பின்வளப் பகுதிக்குள் கடல்வழியாக ஆழ ஊடுருவி அவர்களின் முதன்மை விநியோகப் பாதையை துண்டிக்கும் உத்தியை செங்குத்துச் சூழ்வளைப்பு (Vertical Envelopment) என்பார்கள். கடந்த 1950ஆம் ஆண்டு கொரியப் போரின் போது அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர், வடகொரியப் படையினரின் விநியோகப் பாதையைத் துண்டிக்க இன்சோன் (Incheon Landing) பகுதியில் இத்தகையதொரு பிரம்மாண்ட கடல்வழித் தரையிறக்கத்தை நிகழ்த்தினார்.
ஆனால் ஜெனரல் மெக்ஆர்தர் இன்சோன் தரையிறக்கத்தை நிகழ்த்திய போது, அவருக்குப் பின்னால் உலகின் அதிநவீன அமெரிக்காவின் ஏழாவது கடற்படைக் கப்பல்களும், வான்படை விமானங்களின் குண்டுவீச்சு ஆதரவும், பல்லாயிரக்கணக்கான தொழில்முறை இராணுவ துருப்புக்களும், தங்குதடையற்ற விநியோகமும் தாராளமாகவே இருந்தது . ஆனால், பிரிக்கேடியர் பால்ராஜ் குடாரப்பில் வெறும் 1200 வீரர்களுடன் தரையிறங்கிய போது, பிலிகளிடம் வான்படை ஆதரவு இல்லை, ஶ்ரீலங்க இராணுவத்துடனான ஒப்பிடுகையில் கடற்படை பலம் மிகக் குறைவு.
அதாவது நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்ட இத்தாவில் மணல்வெளியில், எந்தவிதமான விநியோகமும் இன்றி 34 நாட்கள் பீரங்கிப் பிரளயங்களுக்கு மத்தியில் அந்தப் பாதையை அவர் தக்கவைத்திருந்தார். உண்மையில் அதுவரையான இராணுவ அறிவியல் விதிகளின்படி இது ஒருபோதும் சாத்தியமற்ற ஒன்று . அதனால்தான் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம் என்று சர்வதேச ஆய்வாளர்களால் புகழப்படுகிறார்.
அதேபோல இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் பீல்ட் மார்ஷல் எர்வின் ரோம்மல் வட ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் மிகக் குறைந்த வளங்களை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் படைகளைத் திணறடித்தமைக்காக பாலைவன நரி (Desert Fox) என்று அழைக்கப்பட்டார். அதாவது போர்க்களச் சூழல் மாறும் போது, தலைமையகத்தின் உத்தரவுக்காகக் காத்திராமல், களத்திலேயே உடனடி முடிவுகளை எடுப்பதில் ரோம்மல் வல்லவர். அதுபோலவே வன்னிப் பெருநிலப்பரப்பின் அடர்ந்த காடுகளிலும் யாழ்ப்பாணத்தின் உப்புமண் வெளிகளிலும் பால்ராஜ் காட்டிய வேகமும் விவேகமும் ரோம்மலுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல.
குறிப்பாக இலங்கை இராணுவத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை என்பது இருபதாம் நூற்றாண்டின் மிக நீண்டதொரு மரபுவழிப் போர் நகர்வாகும். அதனை எதிர்கொண்ட பால்ராஜ், தற்காப்புப் போர்முறையிலிருந்து திடீரென அதிரடித் தாக்குதல் முறைக்கு மாறும் உத்தியைக் கையாண்டார். அதாவது எதிரி எந்தப்புள்ளியில் பலவீனமாக இருக்கிறான் என்பதை மிகத் துல்லியமாகக் கணித்து, அங்கு தனது முழுக் கவனத்தையும் குவித்துத் தாக்குவதோடு, எதிரி சுதாரிப்பதற்குள் அடுத்த தளத்தைக் கைப்பற்றும் ஜெர்மனிய இராணுவத்தின் மின்னல்வேகத் தாக்குதல் (Blitzkrieg) உத்தியை டாங்கிகள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளின் துணையின்றி, வெறும் காலாட்படைகளைக் கொண்டே அவர் சாதித்துக் காட்டினார்.
அதேபோலவே முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு (1996) மற்றும் கிளிநொச்சி மீட்புச் சமர் (1998) ஆகியன இதற்கான போரியல் சான்றுகளாகும்.
இராணுவப்போரியல் வரலாற்றில் பெரும்பாலான உலகத் தளபதிகள் தங்களின் இராணுவ பலம், நவீன ஆயுதங்கள் மற்றும் வான் ஆதிக்கத்தின் மூலமே வெற்றிகளை தமதாக்கினார்கள் ஆனால், வான் ஆதிக்கமும் பீரங்கிப் பெரும்பலமும் முற்றிலும் எதிரியிடம் இருந்த ஒரு போர்ச்சூழலில் வெறும் மனித ஆற்றலையும், அர்ப்பணிப்பையும், புவியியல் சாதகங்களையும் மட்டுமே முதன்மைப் போர்க்காரணிகளாக வைத்துப் போரிட்டவர் பால்ராஜ்.
மிகக் கடுமையான இதய நோய் பாதிப்பு இருந்த நிலையிலும், ஈழப்போர்க்களங்களில் அவர் காட்டிய அசாத்திய மனோபலம் எதிரிப்படையினரின் உளவுத்துறையினரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது.
பிரிகேடியர் பால்ராஜ் என்ற தளபதி உலக இராணுவ வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தனித்துவமான விசித்திரம். வியட்நாம் போரில் அமெரிக்காவைத் திணறடித்த ஜெனரல் வோ இங்குயென் கியாப் போன்ற தந்திரோபாய ஆளுமைகளின் வரிசையில், ஈழத்து மண்ணில் தோன்றி உலகப் போரியல் விதிகளைத் தலைகீழாக மாற்றி எழுதியவர். போரியல் வளங்களை விட, அதனைப் பயன்படுத்தும் வியூகமே ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டிய இந்த இராணுவ மேதையின் தந்திரோபாயங்கள், உலக இராணுவ வரலாற்றில் என்றும் அழியாத பாடப்புத்தகங்களாகவே விளங்கும்.
வந்திருப்பது பிரபாகரன் என்றால் கூட சமாளித்திருப்போம் ஆனால் வந்தது பால்ராஜ் என்ற ஶ்ரீலங்க இராணுவத்தளபதியின் ஒன்றை வார்த்தையே உலக இராணுவ்வரலாற்றில் ஒப்பில்லாத போர்த்தளபதியை கொண்டிருந்தோம் என்ற பெருமையினை ஈழத்தமிழினம் தனதாக கொண்டாடி தீர்த்தது.
தமிழர் சேனையின் ஆகச்சிறந்த தளபதிக்கு அஞ்சலிகள்
பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 18 May, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. |