உடனடியாக விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி - யாழ் பண்ணைக் கடலிலிருந்து மீட்கப்பட்டது பெண்ணின் சடலம்!
இரண்டாம் இணைப்பு
யாழ் பண்ணைக் கடலில் சடலமாக மிதந்த பெண், தற்போது கடலில் இருந்து மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 203/10, ஆசீர்வாதம் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைக்கொண்ட, 70 வயதுடைய, ஞானசேகரம் மேரி சரோஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி குறித்த பகுதிக்கு சென்றதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை தனது தாயாரைக் காணவில்லை எனத் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது தாயார் தான் என அடையாளம் காட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு உடல் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சற்று முன்னரே சடலம் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சடலம் கவிழ்ந்து இருப்பதால் யார் என அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் தோற்றத்தைப் பார்க்கும் போது சற்று வயதானவராகவே இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பண்ணைக் கடற்பரப்பில் பெண் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலில் மிதக்கும் சடலம்
இன்று மாலை 5 மணியளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில், குறித்த பெண்ணின் உடல் வேறு ஏதேனும் பிரதேசத்தில் இருந்து மிதந்து வருவதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையா
ஏனெனில் உடல் மிதக்கும் பகுதியை சுற்றி வலைகள் காணப்படுவதால் வேறு பகுதியில் இருந்த உடல் மிதந்த வந்தாலும் வலையில் சிக்கியிருக்கும் எனவும் குறித்த பகுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
ஆகவே அந்த பெண் தானாகவே கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா என்பது தொடர்பில் தற்போது யாழ்ப்பாண காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கடற்கரைப் பகுதிக்கு வந்த நபர் ஒருவர், தனது தாயாரைக் காணவில்லையென காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். எனினும் நீதவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வரும் வரை சடலம் மீட்கப்பட முடியாது என்பதால் அடையாளம் காண்பதற்காக காவல்துறையினர் கத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.










