உதவிக் கரம் நீட்டுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு யாழில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பு!
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் பழைய கருவிகளை உபயோகித்து வருகின்ற நிலையில் அவற்றை நிவர்த்தி செய்ய முன்வருமாறு ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவரான கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் உதவியில் தொழிநுட்பக் கல்லூரிக்கு தேவையான இலத்திரனியல் பொருட்கள் வழங்கி வைக்கின்ற வைபவத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் உள்ள நிறுவனமொன்று நவீன மயப்படுத்தப்பட்ட குழாய் பொருத்துதல் தொழிநுட்ப (பிளம்பிங்) வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கு முன்வந்துள்ளது.
இந்த உதவியை செய்ய முன்வந்துள்ள குறித்த நிறுவனத்திற்கும், இதற்கு முன்னர் பல உதவிகளை செய்தவர்களுக்கும் அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், 75 ஆண்டுகள் பழமையான இந்த தொழிநுட்பக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை கூட பாவித்து வருகின்றனர்.
துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது.
இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க உதவிகளை செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தியோக பூர்வமான இணயத்தளம்
இந்த நிலையில், இந்த தொழிநுட்ப கல்லூரிக்கான உத்தியோக பூர்வமான இணயத்தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தினூடாக கல்லூரியினுடைய தேவைகள் மற்றும் தற்போது நடைபெறும் முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.
அந்த அடிப்படையில், இன்றையதினம் (26.07.2023) cds cot jaffna என்கின்ற இணையத்தளத்தை அதிகாரபூர்வமாக கல்லூரியின் அதிபர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.