சற்று முன் ஆரம்பமானது தாயக ஆக்கிரமிப்பிற்கு எதிரான இறுதி நாள் போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளான இன்று காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.
மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14 குடும்பங்களுக்கு சொந்தமான 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெசாக் தினத்தில் போராட்டம்
இந்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு, தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது இறுதி நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.





