நினைவேந்தலை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் கும்பல்களை ஏவிவிடலாம் - முதல்வர் முன்னெச்சரிக்கை!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.
திலீபன் இனத்தின் அடையாளம்
அவர் இனத்தின் அடையாளம் என்ற படியால், மக்களுக்கு சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.
நினைவேந்தல் இடம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கிறது. ஆகவே அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தலை குழப்பும் திட்டத்தில் அரசாங்கம்
இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விடமாட்டார்கள். குழப்புவார்கள். ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசாங்கம் குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் இன்று மதியம் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையில் இடம்பெற்றது. திலீபனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் உணர்வுபூர்மாக நினைவஞ்சலி தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


