பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கும் அளவிற்கு மாறிய திலீபனின் நினைவேந்தல்!
திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் போராளிகளுக்கான நினைவேந்தல்களில் இனத்துவ அரசியலைத் தாண்டிக் கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களைச் சூறையாடுவதாகும் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
ஐங்கரநேசனின் அறிக்கை
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தியாகி திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரே ஏற்படுத்தியதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியும் ஏனையோரும் குற்றம் சாட்டுவதுடன், ஜனநாயகப் போராளிகள் கட்சி தான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் நினைவேந்தல் குழப்பங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கும் அப்பால் இவை நிகழ்ந்திருக்கவே கூடாது என்பது தான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வேதனைக் குரலாக உள்ளது.
நினைவுகளை நாமே அழிக்கின்றோம்
இது வெறுமனே நினைவுகளை மனத்திரையில் மீட்கும் சடங்குகள் அல்ல. மாறாக, அவர்களின் போராட்ட நியாயங்களையும் போராட்டத் தியாகங்களையும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகின்ற உயிர்ப்பான அரசியற் செயற்பாடுகளுமாகும்.
திலீபனின் தூபியை முன்னர் படையினர் அழித்த நிலையில், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம் என ஐங்கரநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.