மானிப்பாய் பிரதேச சபையில் ஊடகவியலாளருக்கு மறுக்கப்பட்ட அனுமதி! 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பில் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் அமைத்தமை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையிலேயே அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 உறுப்பினர்கள் வெளிநடப்பு
இதற்கு சபை உறுப்பினர்கள் மூவரை தவிர ஏனையோர் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் உள்ளே வந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளனர்.

அதன்காரணமாக பல உறுப்பினர்கள் தவிசாளருடன் கடுமையாக வாதிட்டதையடுத்து, சபையானது தவிசாளரின் கட்டுப்பாடு இழந்து, அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சபைக்கு சமூகமளித்திருந்த மூன்று உறுப்பினர்கள் தமது விடுமுறையை கூறிவிட்டு ஏற்கனவே சபையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஊடகவியலாளருக்கு அனுமதி
இறுதியாக சபை அமர்வானது தவிசாளர், உப தவிசாளர் மற்றும் 9 உறுப்பினர்களுடனேயே இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு சில உறுப்பினர்களை தவிர இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த ஊடகவியலாளர் உள்ளே வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சபையில் காரசாரமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்படி, அடுத்த சபை அமர்வில் குறித்த செய்தி தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி கொடுப்பதாக தவிசாளர் சபையில் தெரிவித்ததாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |